×

₹20 லட்சம் முறைகேடு அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீடு உள்பட 6 இடங்களில் அதிரடி சோதனை

பண்ருட்டி, பிப். 29: பண்ருட்டியில் உள்ள அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சி முன்னாள் தலைவராக இருந்தவர் பன்னீர்செல்வம். அதிமுகவை சேர்ந்தவர். 2011 முதல் 2016ம் ஆண்டு வரை இவர் நகர்மன்ற தலைவராக பதவி வகித்தார். இவரது மனைவி சத்யா பன்னீர்செல்வம், 2016 முதல் 2021 வரை பண்ருட்டி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். பன்னீர்செல்வம் நகர்மன்ற தலைவராக இருந்தபோது, ஆணையாளராக பெருமாள் என்பவர் பணியாற்றினார். அந்த கால கட்டத்தில் பண்ருட்டி பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான சைக்கிள் ஸ்டாண்ட் உரிமம் வழங்குவதில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து சட்டமன்ற உரிமை குழு தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ தலைமையிலான குழுவினர் சில மாதங்களுக்கு முன் பண்ருட்டி நகராட்சியில் ஆய்வு நடத்தியபோது, சைக்கிள் ஸ்டாண்ட் உரிமத்தில் ரூ.20 லட்சம் வரை முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக குழுவினர் அளித்த புகாரின் பேரில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தி முறைகேடு நடந்ததை கண்டறிந்தனர். இது பற்றி கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் எஸ்பி தேவநாதன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று காலை 5 மணியளவில் பண்ருட்டி காமராஜர் நகரில் உள்ள சத்யா பன்னீர்செல்வத்தின் வீடு, அலுவலகம், பண்ருட்டி கந்தன்பாளையத்தில் உள்ள பன்னீர்செல்வத்தின் நண்பர் பெருமாள் (வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர்) வீடு, எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வரும் மோகன், பத்திர விற்பனையாளர் செந்தில்முருகா ஆகியோர் வீடுகள், சென்னையில் உள்ள பன்னீர்செல்வத்தின் வீடு உள்ளிட்ட 6 இடங்களில் அதிரடி ேசாதனை நடத்தினர். இது தொடர்பாக பன்னீர்செல்வம், அவரது கூட்டாளிகள் பெருமாள், பத்திரம் செந்தில், எலக்ட்ரிக்கல் மோகன் மற்றும் முன்னாள் ஆணையர் பெருமாள் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் இந்த சோதனையின்போது தொடர்புடைய ஆவணங்கள், நிலம் மற்றும் மனை சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றின் சொத்து மதிப்பு ரூ.15,64,32,237 ஆகும். இந்த முறைகேடு தொடர்பாக அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post ₹20 லட்சம் முறைகேடு அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீடு உள்பட 6 இடங்களில் அதிரடி சோதனை appeared first on Dinakaran.

Tags : AIADMK MLA ,Panruti ,Satya Panneerselvam ,AIADMK ,MLA ,Dinakaran ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு